hanifa video

புதன், 12 அக்டோபர், 2011

மனைவியை கொலை செய்தவர் தூக்கிட்டு தற்கொலை

கருத்தை பதிவு செய்ய கோபிசெட்டிபாளையம்: கேரள மாநிலம் மூணாறில், மனைவி சாமிளாவை கொலை செய்த மகேஷ்குமார், ஈரோட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது பையில் இருந்து, கடிதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் நம்பியூர், பட்டிமணியக்காரன் பாளையத்தை சேர்ந்த தம்பதி, சுப்பிரமணியன், 62 - அமிர்தம், 55. இவர்களது பூர்வீகம் கோவை. இவர்களுக்கு, மகேஷ்குமார் என்ற மகனும், பிரபா என்ற மகளும் உள்ளனர். கடந்த 13 ஆண்டுகளுக்கு முன், பெற்றோரிடம் கோபித்த மகேஷ்குமார், வீட்டை விட்டு வெளியேறி விட்டார். பின், படித்து, பெங்களூரில் பணியில் சேர்ந்து, சென்னையை சேர்ந்த சாமிளாவை காதலித்து, மூன்றாண்டுகளுக்கு முன், திருமணமும் செய்து கொண்டார். சில தினங்களுக்கு முன், சாமிளாவை மூணாறுக்கு அழைத்துச் சென்ற மகேஷ்குமார், அங்கு ஒரு லாட்ஜில் அவரை கொலை செய்து, அங்கிருந்து தப்பியோடினார். போலீசார் தன்னைத் தேடுவதை அறிந்த மகேஷ்குமார், 13 ஆண்டுக்கு பின், பட்டிமணியக்காரன் பாளையத்தில் உள்ள பெற்றோர் வீட்டருகே வந்தார். பெற்றோரை பார்க்காமல், வீடு அருகிலுள்ள தோட்டத்தில், மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பெற்றோருக்குத் தெரியாமல், அவர்கள் வீட்டு குளியலறையில், மகேஷ்குமார் விட்டுச் சென்ற பை கிடந்தது. அதில், ஒரு நோட்டுப் புத்தகத்தில், பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்துள்ளார். நம்பியூர் போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர். சியாமளா கொலை வழக்கு தொடர்பாக விசாரித்து வந்த மூணாறு போலீசார், மகேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டதால், வழக்கை முடிக்க முடிவு செய்துள்ளனர். மகேஷ்குமார் கடிதத்தில் எழுதியிருந்தது என்ன? வீட்டு குளியலறையில் அவர் வைத்துச் சென்ற பையில், ஒரு நோட்டுப் புத்தகம் இருந்தது. அதில், 26 பக்கத்துக்கு, தன் குடும்பத்தினருக்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்திருந்தார். கடிதத்தில் அவர் எழுதியதாவது: தந்தைக்கு...: கடந்த பத்து ஆண்டுகளாக நான், "அப்பா' என்று கூப்பிடக்கூட இல்லை. உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்ககிட்ட பேசணும்னு நெறைய வாட்டி நினைப்பேன். என் வாழ்க்கை கஷ்டப்பட, நீங்கள் காரணம் இல்லை. எல்லாம் நான் பிறந்த நேரம்; விதி. நீங்க எதுவும் வருத்தப்பட வேண்டாம். அடுத்த ஜென்மத்தில் நான் உங்களுக்கு பெண் குழந்தையாக பிறப்பேன். இந்த ஜென்மத்தில், இதுவரை ஒரு பொறுப்பான பையனாக இல்லை. தாய்க்கு...: உங்களுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற முடியாமல் போயிடுச்சு. என்னை நீங்கள் அதிகமாக புரிந்து வைத்துள்ளீர்கள். தங்கை பிரபாவுக்கு...: தங்கச்சி இருந்தும், தங்கச்சியை அதிகமாக கூப்பிட்டது இல்லை. என்னை ஆரம்பத்தில் இருந்தே புரிந்து இருக்கிறாய். என் மீது கால் வைத்து, நீ தூங்கியதை நினைத்தால் கண்ணீர் வருகிறது. மதனை கவனித்துக் கொள். பிரபாவின் கணவர் மதனுக்கு...: இந்த உலகத்திலேயே உங்களை அதிகமாக பிடிக்கும். எங்கள் குடும்பத்துக்கு அவ்வளவு செய்துள்ளீர்கள். உங்களிடம் எந்த கோரிக்கையும் வைக்க முடியாது. அம்மா, அப்பா, தங்கையை பார்த்துக் கொள்ளுங்கள். தயவு செய்து என் பேக்கில் இருக்கிற ஸ்டேட்மென்டை போலீசில் கொடுங்க. சாமிளா சாவை பிரிய முடியலை. இவ்வாறு மகேஷ்குமார் கடிதம் எழுதியுள்ளார். கொலைக்கான காரணம் புரியாத புதிர்: "மனைவி மீதான சந்தேகத்தால், அவரைக் கண்டித்தார் மகேஷ்குமார். கோபமுற்ற சாமிளா, ஆள் வைத்து, மகேஷை மிரட்டியதாகவும், சென்னை, கோயம்பேடு போலீசாரிடம் மகேஷ்குமார் அளித்த புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், அவர்களிடையே பிரச்னை தீரவில்லை; விவாகரத்து வழக்கு தொடர்ந்தனர்' என, மகேஷ்குமாரின் உறவினர்கள் கூறுகின்றனர். ஆனால், நேற்று முன்தினம், சாமிளாவின் சகோதரி கொடுத்திருந்த பேட்டியில், "சாமிளாவும், நானும் ஒரே விடுதியில் தங்கியிருந்தோம். சியாமளாவுக்கும், அவள் கணவருக்கும் இடையே தகராறு உண்டு. எனவே, விவாகரத்து கோரியிருந்தனர். ஆனால், மகேஷ்குமாருடன், சாமிளா அடிக்கடி போனில் பேசியது எனக்குப் பிடிக்கவில்லை. எனவே, அவளுடன் நான் பேசவில்லை. சில தினங்களுக்கு முன், "மகேஷ்குமார் திருந்தி விட்டார் என்றும், தன்னை மாமியார் வீட்டுக்குக் கூட்டிச் செல்வதாகக் கூறியுள்ளார் என்றும், என் தாயிடம் கூறியிருந்தார்' என்றார். இரு தரப்பினரும் வெவ்வேறு கருத்துக்கள் கூறியுள்ளதால், கொலைக்கான உண்மையான காரணம் புரியவில்லை. சாமிளாவுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்., அனுப்பியவர்கள்: மகேஷ்குமார் கடிதம்: மனைவி சாமிளாவுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்., அனுப்பியவர்கள் பெயர்களை கூறி, போலீசாருக்கு மகேஷ்குமார் கடிதம் எழுதியுள்ளார். மூணாறு லாட்ஜில் மனைவி சாமிளாவை கொலை செய்துவிட்டு சொந்த ஊரில் தானும் தற்கொலை செய்து கொண்ட மகேஷ்குமார், 28, போலீசாருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: வாழ்ந்தால் மரியாதையோடு, மானத்தோடு, நான்கு பேர் பாராட்டும் வகையில் கம்பீரமாகவும், சந்தோஷமாகவும் வாழ வேண்டும். நல்ல முறையில் வாழ எவ்வளவோ முயற்சி செய்தேன். அதற்காக சாமிளாவை எத்தனையோ முறை விட்டுக் கொடுத்து வாழ்ந்தேன். கெஞ்சி, மிரட்டி, அழுது கூட பார்த்தேன். அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு போய்விட்டாள். என்கிட்ட பொய் சொல்வதே வாடிக்கையாகி விட்டது. ஒவ்வொரு நிமிடமும் மாறிவிட மாட்டாளா? என, நினைப்பேன். இதற்காக மூன்று அல்லது நான்கு நாள் சுற்றுலா அழைத்து சென்று, என் காதலை, உணர்வுபூர்வமாக பக்கத்தில் இருந்து அவளுக்கு காட்டினால், திருந்த வாய்ப்பு இருக்கும் என, மூணாறு சென்றோம். திருந்தவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதென நினைத்தேன். அவள் மனதில் எந்த மாற்றமும் இல்லை. பழைய சாமிளா எனக்கு கிடைக்கவில்லை. வாய்த்தகராறு இப்படியாகி விட்டது. ஒரு தாய், குழந்தையை மாய்த்து விட்டு; எப்படி அவளும் மாய்த்துக் கொள்வாளோ அப்படித்தான் இதுவும். என் உலகம், கனவு, லட்சியம் எல்லாமே மனைவி சாமிளா தான். சாமிளாவை என் உடலில் இருந்தும், மனதில் இருந்தும் பிரிக்க முடியாது. ரத்தத்தில் ஊறியது அவளுக்கும் தெரியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதுதவிர, மகேஷ்குமார் ஆங்கிலத்தில் எழுதிய கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அதில், சாமிளாவுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்., அனுப்பியவர்கள் விபரம் உள்ளது. சென்னை திருவான்மியூர் சந்தோஷ்ராம், கொளத்தூர் சுரேஷ்குமார், கொளத்தூர் பாபுநகர் கார்த்திக், மதுரை விளாங்குடி அரவிந்த், விஜய் "டிவி' காமெடி நடிகர் சரவணன், சென்னை அண்ணாநகர் நடராஜபுரம் கணேஷ், சிவா, ராஜ்மோகன், சரவணா, சற்குணா, சுதாகர் ஆகிய, 11 பேர், நள்ளிரவிலும் ஆபாச எஸ்.எம்.எஸ்., அனுப்புவதாகவும், இதில், "அரவிந்த் - மெயின் பர்சன்' (முக்கிய நபர்) என குறிப்பிட்டுள்ளார். வரப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.